யூனியன் பிரதேசமாகிறது ஹைதராபாத்? ராயல தெலுங்கானாவுக்கு டி.ஆர்.எஸ். கடும் எதிர்ப்பு!!
ஆந்திராவின் 10 மாவட்டங்களைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்பதற்காக நீண்டகாலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநில சட்டசபைக்கும் லோக்சபாவுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் தெலுங்கானா விவகாரத்தில் இறுதி முடிவு எடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளது மத்திய அரசு. இதற்கான தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் டெல்லியில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத் மாநகராட்சியுடன் 13 கிராமங்களை இணைப்பது தொடர்பான உத்தரவு ஒன்றை அரசு பிறப்பித்திருக்கிறது. ஏற்கெனவே ஆந்திராவை பிரித்தால் ஹைதராபாத் பொதுதலைநகராக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் தற்போதைய உத்தரவானது ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்கும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதை நிராகரிப்போம் என்று எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
மேலும் தெலுங்கானாவின் 10 மாவட்டங்களுடன் ராயலசீமாவின் கர்நூல், அனந்தபூர் மாவட்டங்களை இணைத்து ராயல தெலுங்கானாவை மத்திய அரசு உருவாக்கக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் ராயல தெலுங்கானாவை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். 'நாங்கள் கேட்பது 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தெலுங்கானாவையே.. யாருக்கு வேண்டும் ராயல தெலுங்கானா? யார் கேட்டது ராயல தெலுங்கானா? என்று கொந்தளித்திருக்கிறார் அவர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு இறுதி முடிவை அறிவிக்காத நிலையில் ஆந்திராவில் உச்சகட்ட பதற்றமான நிலை நீடித்து வருகிறது.