இஷ்ரத் வழக்கு: 'தலைமறைவு' போலீஸ் அதிகாரி பாண்டே ஆம்புலன்சில் கோர்ட்டில் ஆஜர்!
அகமதாபாத்: குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் என்கவுன்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி பிபி பாண்டே ஆம்புலன்சில் படுத்தபடியே இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள் என்று மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான், ப்ரனேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் ஆகிய 4 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த 4 பேரும் அப்பாவிகள் என்றும் குஜராத் போலீசார் நடத்தியது போலி என்கவுன்ட்டர் என்றும் புகார்கள் எழுந்தன
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இது போலி என்கவுன்ட்டர் என்று கூறியதுடன் குஜராத் போலீஸ் அதிகாரிகள் பிபி பாண்டே உள்ளிட்டோர் மீதும் ஐபி அதிகாரி ராஜேந்திர குமார் மீதும் குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் காவல்துறை அதிகாரி பிபி பாண்டே நீண்டகாலம் தலைமறைவாக இருந்தார். அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே அவர் தம்மை கைது செய்ய தடை கோரி அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை வெள்ளிக்கிழமையன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 2 நாட்களுக்கு பாண்டேவை கைது செய்ய தடை விதித்ததுடன் இன்று விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை திடீரென தமக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார் பாண்டே. பின்னர் ஆம்புலன்ஸிலேயே அவர் நீதிமன்றத்துக்கு வந்தார். ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே அவர் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். பாண்டேவை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் அவர் திடீரென உடல்நலக் குறைவு என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.