திருத்தணிக்கு காவடி எடுத்து சென்ற 3 பக்தர்கள் ரயில் மோதி மரணம்
ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பாதையாத்திரை பக்தர், பாலிடெக்னிக் மாணவர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி வேலூர் மாவட்ட பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை செல்கின்றனர்.
குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி லட்சுமிஅம்மாள் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது45), மேல்கார்கூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ்(18) பாலிடெக்னிக் மாணவர், தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் கொண்டாரம்பட்டியை சேர்ந்த சிங்காரவேல்(20) கல்லூரி மாணவர் இவர்களும் திருத்தணிக்கு காவடி சுமந்து கொண்டு பாதயாத்திரை புறப்பட்டனர்.
நேற்று இரவு வேலூர் அருகே உள்ள பொய்கையில் தங்கிவிட்டு அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு வாலாஜாரோடு ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, ஆனந்தன், ஜெகதீஷ், சிங்காரவேல் மற்றும் ஆம்பூரை சேர்ந்த நவீன்(18) ஆகியோர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது காலை 5.30 மணிக்கு சென்னை நோக்கி வந்த ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தன், ஜெகதீஷ், சிங்காரவேல் 3 பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். நவீன் படுகாயம் அடைந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை டி.எஸ்.பி. லாவண்யா, காட்பாடி ரயில்வே போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா ரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயமடைந்த நவீனை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பாதையாத்திரையாக சென்ற பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.