மதுரை: பள்ளிக்கு வந்த மர்ம போன்… கலவரமான திருமங்கலம்… பெற்றோர்கள் பீதி
திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பி.கே.என் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெற்றோர்கள் அனைவரும் அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்களை அழைத்துச் செல்ல திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை அடுத்த திருமங்கலத்தில் பி.கே.என். நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பி.கே.என். மெட்ரிக்குலேசன் பள்ளி அலுவலகத்திற்கு இன்று காலை 9 மணியளவில் தொலைபேசி வந்தது. டெலிபோனில் பேசிய மர்மநபர், உங்கள் பள்ளிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 மணி நேரத்தில் அது வெடித்து சிதறும் என்று கூறி போனை வைத்துவிட்டான்.
இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசாரும் பள்ளிக்கூடத்துக்கு விரைந்து வந்து பள்ளி வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து பள்ளி வகுப்பறைகளில் படித்து கொண்டிருந்த 500 மாணவர்களையும் வெளியேற்றி வகுப்புகளிலும் சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
கலவரமான திருமங்கலம்
இதனிடையே வெடிகுண்டு புரளி திருமங்கலம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனையடுத்து அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, மெப்கோ பள்ளி, உள்ளிட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பதற்றம் ஏற்பட்டது. அனைவரும் தங்களின் பிள்ளைகளை அழைத்துச்செல்ல பள்ளிகளின் முன்பு திரண்டனர்.
எனினும் பள்ளி நிர்வாகிகள் மாணவர்களை அனுப்ப மறுத்தனர். இதனையடுத்து பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் பெரும்பாலான பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு பெற்றோர்களுடன் மாணவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
வெடிகுண்டு புகார் வந்த பள்ளியில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை என்பது தெரியவந்தது.
யாரோ ‘மர்ம' ஆசாமி பீதியை கிளப்ப வீண் வதந்தி பரப்பி இருப்பதாக தெரிகிறது.
வெடிகுண்டு வைத்திருப்பதாக போன் செய்த ஆசாமி யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.