வெடிகுண்டு மிரட்டல்: வைகை, குருவாயூர் ரயில்கள் நிறுத்தம்... சோதனை
விருதாச்சலம் ரயில் நிலையத்திற்கு இன்று காலையில் மர்ம தபால் ஒன்று வந்தது. அதில் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அத்வானிக்கு வெடிகுண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விருதாச்சலம் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக போலீசில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து திருச்சி-விருதாச்சலம் இடையே தண்டவாளத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விருதாச்சலம் ரயில் நிலையத்திலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து சென்னையில் இருந்து காலையில் புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரையில் இருந்து சென்னை வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
வெடிகுண்டு புரளி காரணமாக இத்தடத்தின் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டு சோதனைக்குப் பின்னர் புறப்பட்டு சென்றன.