‘துரு துரு’ பேரனைக் கட்டிப் போட்ட பாட்டி: தீவிபத்தில் பாட்டியோடு பேரனும் பலியான பரிதாபம்
சென்னை: சென்னையில் எதிர்பாரா விதமாக குடிசை வீட்டில் தீப்பற்றியதில் சிறுவனும், வயதான மூதாட்டியும் பரிதாபமாகப் பலியானார்கள்.
செஞ்சி அருகே ஈச்சூர் கருங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் காண்டீபன். கட்டுமானத் தொழிலாளி. இவர் மனைவி தேவகி, ஒன்றரை வயது மகன் தனுஷ், தம்பி லோகநாதன் மற்றும் தனது தாயார் லட்சுமு அம்மாளுடன் சென்னை, ஆதம்பாக்கத்தில் தான் கட்டுமானத் தொழில் செய்து வரும் இடத்தின் அருகிலேயே குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறார்.
காண்டீபன், தேவகி மற்றும் லோகநாதன் கட்டுமானப் பணிக்கு சென்று விட்டால், லட்சுமு அம்மாள் தான் பேரன் தனுஷைப் பார்த்துக் கொள்வாராம். சம்பவத்தன்றும் வழக்கம் போல் மூவரும் பணிக்குச் சென்று விட, பாட்டியும், பேரனும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
லட்சுமி அம்மாளுக்கு வயது 70க்கும் மேல் ஆவதால், பேரன் செய்யும் சேட்டைகளுக்கு அவரால் ஈடு கொடுக்க முடிவதில்லை. எனவே, தனுஷின் இடுப்பில் கயிறு ஒன்றைக் கட்டி அவனை வீட்டிற்குள் விளையாட வைப்பது வழக்கமாம். அன்றும், வழக்கம் போல் பேரனைக் கட்டிப் போட்டு விட்டு, படுத்து ஓய்வெடுத்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக குடிசையில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைக் கண்டு அலறி ஓடி வந்த காண்டீபன், தாவகி மற்றும் லோகநாதன் மூவரும் தீயை அணைக்க போராடியுள்ளனர். ஆனால், அதற்குள் குடிசைக்குள் இருந்த பாட்டியும் , பேரனும் பரிதாபமாகப் தீயின் கோர நாக்குகளுக்கு பலியானார்கள்.
தீக்காயம் அடைந்த லோகநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிபத்து ஏற்பட என்னக் காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பரிதாபம் என்னவென்றால், கட்டிப் போட்டிருந்ததால் சிறுவனால் தப்பிக்க முடியவில்லை, வயோதிகத்தால் பாட்டியால் தப்பிக்க இயலவில்லை என்பது தான்.