தேவி கைய வச்சா... தலையெல்லாம் ச்சும்மா செம ஷேப்பாயிடும்ல...!
திருப்பூர்: ஆண்களுக்கு உள்ள ஒரு கவலை என்ன தெரியுமா... தலையை சரி செய்வதுதான் - தலைக்குள் உள்ளதை மட்டுமல்ல - வெளியில் இருக்கும் தலை முடியையும் அலங்கரிப்பதுதான்.
முடி வெட்றது என்றாலே செம டென்ஷாகிப் போகும்.. தலையைக் கொடுக்கும் இடத்தில் அதை பத்திரமா வெட்டி சரி செய்து திருப்பி அனுப்பி வைக்கும் வரை அப்படியே பேந்தப் பேந்த உட்கார்ந்திருக்கும் ஆண்களை அடிக்கடி சலூன் பக்கம் பார்க்கலாம்.
ஆனால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு இளம் பெண் சலூனில் வேலை பார்த்து பெருவாரியான பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்.
பல்லடம் தேவி
30 வயதாகிறது தேவிக்கு. பல்லடம்தான் சொந்த ஊர். பி.காம் படித்துள்ளார் இந்தப் பெண்.
சொந்தமாக சலூன்
சொந்தமாக சலூன் வைத்துள்ளார் தேவி. ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடி திருத்தும் தொழிலை செய்து வருகிறார். ஷேவிங்கும் செய்கிறார்.
தொழிலில் நேர்த்தி - கை ராசி
தொழிலை அக்கறையுடனும், ஆர்வத்துடனும் செய்வதால் தேவிக்கு ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள். மேலும் பட்டதாரியான இவர் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பதால் அவருக்கு பாராட்டுக்களும் குவிகின்றன.
வறுமையில் குடும்பம்...அரசு வேலை கிடைக்கவில்லை
தேவி இந்தத் தொழிலுக்கு வந்தது குடும்பத்தின் கட்டாயமே.. அவரது குடும்பம் வறுமையில் வாடி வந்தது. அப்பாவுக்கு சர்க்கரை வியாதி இருந்தது. தந்தை பார்த்து வந்த தொழில் இது. மறுபக்கம் அரசு வேலைக்கு முயன்றும் கிடைக்காத நிலை. பார்த்தார்.. கத்திரிக்கோலை கையில் எடுத்து தொழிலுக்கு வந்து விட்டார்.
ஆரம்பத்தில் கிண்டல், கேலி.. கூச்சம்
ஆரம்பத்தில் பலரும் இவரைக் கிண்டல் கேலி செய்துள்ளனர். ஆண்களோ வர வெட்கப்பட்டுள்ளனர். ஆனால் தேவியின் தொடர் முயற்சியால் இப்போது ஆண்கள் வெட்கம், கூச்சம் நீங்கி வர ஆரம்பித்து தொழில் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறதாம்.
தொழிலில் தேவி காட்டும் சிரத்தை, அக்கறை, மரியாதை, நேர்த்தியாக முடிவெட்டுவது ஆகியவை அவருக்கு நிறைய மரியாதையான கஸ்டமர்களைத் தேடிக் கொடுத்துள்ளதாம்.