20 ரூவாய்க்கு 8 பேர் சாப்பிடலாம்ய்ய்யா... அஸ்ஸாம் அமைச்சர் அதிரடி!
குவஹாத்தி: எத்தனை ரூபாய்க்கு எத்தனை பேர் சாப்பிடலாம் என்பது கிட்டத்தட்ட பட்டிமன்ற பஞ்சாயத்து ரேஞ்சுக்கு நாடு முழுவதும் அலச ஆரம்பித்துள்ளனர்.
இத்தனை ரூபாய்க்கு இத்தனை பேர் சாப்பிடலாம்.. நான் நிரூபிக்கிறேன் என்று ஆளாளுக்கு தட்டையும், துட்டையும் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டனர்.
இப்போது அஸ்ஸாமைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் 20 ரூபாய்க்கு 8 பேர் சாப்பிடலாம் என்று பட்டையைக் கிளப்பியுள்ளார். இவரது பேச்சுக்கு அஸ்ஸாமில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனாலும் மனுஷன் கவலைப்படவில்லை. நான் நிரூபிக்கிறேன் பாஸ் என்று தொடர்ந்து உறுதியாக கூறி வருகிறார்.
தாராளமா சாப்பிடலாம்
அஸ்ஸாம் விவசாயத்துறை அமைச்சர் நிலோமணி சென் தேக்கா. இவர்தான் இந்த டேக்கா விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 20 ரூபாய்க்கு நான் சாப்பாடு வாங்குகிறேன். அதை 8 பேர் தாராளமாக சாப்பிடலாம்.
பொய் இல்லைங்க..நெசமாத்தான்
நான் பொய் சொல்லவில்லை. இன்னும் ஒரே வாரத்தில் நான் நிரூபிக்கிறேன் என்றார் அவர்.
மாநிலமெங்கும் போராட்டம்
இவரது இந்தப் பேச்சைக் கேட்டு மாநிலமெங்கும் கடும் எதிர்ப்பு கிளமபியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள், கண்டனங்கள், போஸ்டர் ஒட்டி திட்டுதல் என களேபரமாகியுள்ளது. இவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி உள்பட அத்தனைக் கட்சிகளும் தேக்கா பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஏன் இப்படிப் பேசுறாரு.. கோகாய் கடுப்பு
முதல்வர் தருண் கோகாயும் கூட இதை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது தேக்காவின் சொந்தக் கருத்து. இதற்கும் அரசுக்கும் சற்றும் சம்பந்தில்லை என்றார். மேலும் அவர் கூறுகையில், நான் ஒருபோதும் இதுபோல கருத்து தெரிவித்ததில்லை. ஏன் தேக்கா இப்படிப் பேசுகிறார் என்றும் புரியவில்லை என்றார் கடுப்பாக.
நிரூபிக்காமல் விட மாட்டேன்
ஆனால் செய்தியாளர்களைக் கூட்டி நான் சொல்வதை நிரூபிக்கத்தான் போகிறேன் என்று தேக்கா தொடர்ந்து பேசி வருகிறார். அவர் சொல்லும் கணக்கைப் பார்த்தால் ஒரு ஆளுக்கு ரூ. 2.50க்கு சாப்பாடு கிடைக்கும் என்று தெரிகிறது..
இரண்டாரூபாயை வச்சு ஒரு வாழைப்பழத்தைக் கூட முழுசா வாங்க முடியாதே தேக்கா..!