புத்தகயா குண்டுவெடிப்பு வழக்கு: வெளிநாட்டவர் உள்பட 5 பேரின் வரைபடங்கள் வெளியீடு
பாட்னா: புத்தகயாவில் உள்ள மகாபோதி கோவில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 குற்றவாளிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோவிலில் கடந்த 7ம் தேதி அடுத்தடுத்து 10 குண்டுகள் வெடித்தன. இதில் 2 புத்த பிக்குகள் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது. முன்னதாக 2 குற்றவாளிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் விசாரணைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக வெளிநாட்டவர் உள்பட 5 பேரின் வரைபடங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த வரைபடங்கள் ரிக்ஷாக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடம் அளிக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.