உதயமாகிறது தெலுங்கானா! காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் ஒப்புதல்! ஹைதராபாத் பொதுதலைநகர்!!
ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லியில் இன்று மாலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய லோக் தளத் தலைவர் அஜீத்சிங் ஆகியோர் இப்புதிய மாநில உருவாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
ஹைதராபாத் பொதுதலைநகர்
காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், தெலுங்கானாவுக்கும் ஆந்திர மாநிலத்துக்கும் பொதுதலைநகராக 10 ஆண்டுகாலத்துக்கு ஹைதராபாத் நீடிக்கும் என்றார்.
நாளை சிறப்பு கேபினட் கூட்டம்
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி ஒப்புதல் தெரிவிக்க நாளை காலை மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வரவேற்றுள்ளது.
தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ராயலசீமா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.
தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவதால் சீமாந்த்ரா எனப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அங்கு துணை ராணுவப் படையைச் சேர்ந்த 1,200 பேர் ஏற்கெனவே குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் 1,000 பேரை கொண்ட துணை ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா ஆயுதப் படை போலீசார், தமிழக ஆயுதப் படை போலீசார் ஆகியோரும் ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.