'பார்த்திபன்’ ஸ்டைலில், உதவி செய்தவரை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்த ‘கிளி’
இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் யோர்க்ஸ் பகுதி வீதியில் கிளி ஒன்று வழி தெரியாமல் சுற்றித்திரிந்தது. அதனைக்கண்டு இரக்கப்பட்ட நபர் ஒருவர், அக்கிளியைப் பிடித்து உரியவரிடம் சேர்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால், பயத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த அக்கிளி அந்நபரை காது கொடுத்துக் கேட்க இயலாத அளவு கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளது.
ஆனாலும் அதனைப் பொருட்படுத்தாத அந்நபர் கருமமே கண்ணாக செயல் பட்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அக்கிளி அவரைத் தன் அலகுகளால் குத்திக் காயப்படுத்தியுள்ளது. அப்போதும், அவர் வலியைப் பொறுத்துக் கொண்டு அக்கிளியை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதுக்குறித்து அக்கால்நடை மருத்துவமனை ஊழியர் ஹெய்லி தாம்சன் என்பவர் கூறுகையில், ‘இந்த கிளி மருத்துவர்களையும், உதவியாளர்களையும் கடுமையாக தாக்கியதாகவும், பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலில் இருந்ததால் அது அவ்வாறு நடந்திருக்கலாம்' எனவும் தெரிவித்துள்ளார்.
ஒருவழியாக அக்கிளியின் உரிமையாளாரைக் கண்டு பிடித்து அக்கிளியை ஒப்படைத்துள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள். அக்கிளியின் பெயர் ஜார்ஜ் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.