என் உயிருக்கு ஆபத்து.. மதுரை ஆதீனம் புகார்
இதுதொடர்பாக மாலைமலருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
மதுரை ஆதீனம் மடம் ஜாதி, மதம் நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், தமிழ் வளர்ச்சிக்கும் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் பாரதீய ஜனதா பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினேன். இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக 20க்கும் மேற்பட்ட முறை டெலிபோனில் மிரட்டல் எனக்கு வருகிறது.
போனில் பேசும் ஆசாமிகள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசி வருகிறாய், உன் பேச்சை இத்துடன் நிறுத்தாவிட்டால் தீர்த்து கட்டிவிடுவோம் என்று போனில் மிரட்டி வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீசில் புகார் செய்ய உள்ளேன். கடந்த 1980 முதல் 2011 வரை மதுரை ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.
தற்போது என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போனில் தொடர்ந்து மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே முதல்வர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.