நடைபயணம் தொடங்கலாமா.. எத்தனை பேர் வருவீங்க.. எத்தனை நாள் நடப்பீங்க? - குமரி அனந்தன்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை என்ற பெயரில் தனி இயக்கம் நடத்துபவருமான குமரி அனந்தன் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை:
இந்திய நதிகளில் ஓடும் தண்ணீரில் 39 சதவீதம்தான் பயன்படுத்துகிறோம். மீதி எல்லாம் கடலுக்கு போகிறது. நதிகளை தேசிய மயமாக்கி இணைப்போம் என்று நான் பாராளுமன்றத்தில் பேசினேன். டெல்லியில் உண்ணா நோன்பிருந்தோம். ஆனால், எண்ணம் ஈடேறவில்லை.
தர்மபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவிலுக்கு 22-6-1923-ல் தியாகி சுப்பிரமணிய சிவா அடிக்கல் நாட்டினார். பாரதமாதா எனும் சமத்துவ திருக்கோவிலுக்காக பலமுறை பாதயாத்திரை நடந்தேன். ஆனால், நடைபெறவில்லை.
மது ஒழிப்போம், மதி வளர்ப்போம் என்று வள்ளுவரில் தொடங்கி, காந்தி, காமராஜர், அண்ணா வரை கூறினார்கள். நடைபயணம் மேற்கொண்டோம். உண்ணா நோன்பிருந்தோம். எண்ணம் ஈடேறவில்லை.
இவையெல்லாம் நிறைவேற வேண்டும் என்று ஒரு பாதயாத்திரை, நடைபயணம் மேற்கொள்ளலாமா? என்று சிந்திக்கிறேன். காந்தியடிகள் அவதரித்த நாளும், காமராஜர் அமரரான நாளும் அக்டோபர் 2-ந் தேதி வருகிறது. அந்த நாளில் நடை பயணத்தை தொடங்கலாமா?
எங்கிருந்து தொடங்கி எங்கே சென்று சேரலாம். தொடங்கிய நாளில் இருந்து நிறைவு பெறும் நாள் வரை உடன் எத்தனை பேர் வருவார்கள், எத்தனை நாள் நடைபயணத்தில் பங்கேற்பார்கள் என்பதையெல்லாம் அறிய விரும்புகிறேன். ஆக்கம் தர முன்வருவோர் முழு விவரங்களுடன் காந்தி போரம், லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரிக்கு தெரியப்படுத்தவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குமரி அனந்தன் கேட்டிருப்பதிலும் ஒரு நியாயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு நடைபயணம் மேற்கொண்டிருந்தார். வரும் வழியில் காங்கிரஸ் கட்சியில் உள்ள அவரது சில ஆதரவாளர்கள் சேலம் அருகே ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மேடைக்கு எதிரே காலி மைதானம். குமரி அனந்தன் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தும் ஒருவரும் மைதானத்துக்குள் அவர் பேச்சைக் கேட்க வரவே இல்லை. வெறுத்துப் போய் தன்னோடு வந்த சிலரை அழைத்துக் கொண்டு நடை பயணத்தைத் தொடர்ந்தார். அடுத்த நாள் செய்தி வெளியாக அனைவரும் சிரிக்கும்படியாகிவிட்டது.
அந்த அனுபவம் நினைவுக்கு வந்ததால் இப்போது முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து கொண்டு நடக்க இருக்கிறார்.
என்ன ரெடியா... யாராவது இருக்கீங்களாப்பா... எடுங்க போஸ்ட் கார்டை... எழுதுங்க 'குமரியாருக்கு'!