நம்ம கண்ணு பொறந்து 50 கோடி வருஷமாயிருச்சாம்....!
சிட்னி: மனிதக் கண்களின் வயது 50 கோடி ஆண்டுகள் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
அதாவது நமது மூளையை விட கண்கள்தான் மூத்ததாம். இப்படிச் சொல்கிறது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வு.
மனித உடலில் மிக மிக முக்கியமான ஒரு உறுப்பு கண்தான். அந்த கண்களின் வயதைக் கண்டறிந்துள்ளனர் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழக குழுவினர்.
கண்கள் பிறந்தது எப்போ...?
கண்கள் எப்போது தோன்றின என்பது இதுவரை புரியாத புதிராக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு கண்கள் குறித்த ஆய்வில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.
அமீபியா தோன்றியபோது....!
பூமியில் அமீபியா போன்ற ஒற்றைச் செல் உயிரினங்கள் மட்டுமே வாழ்ந்த காலத்திலேயே பார்வை உருவாகி விட்டதாக கூறப்பட்டது முன்பு.
ஆஸ்பின்...
அந்தக் காலகட்டத்தில் முதல் முறையாக ஒளியை உணரும் வேதிப் பொருளான ஆஸ்பின்-ஐ வைத்து இருளில் கூட தன்னைச் சுற்றிலும் உள்ளவற்றை அறியும் திறனை சில ஒற்றைச் செல் உயிரினங்கள் பெற்றிருந்ததாம். இதுதான் முதல் பார்வை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஆஸ்பினை வைத்து வெளிச்சத்தை கண்ட உயிரினங்கள்
இந்த ஆஸ்பினை வைத்துத்தான் அப்போதைய உயிரினங்கள் வெளிச்சத்தை பார்க்க முடிந்ததாம். ஆனால் இந்த உயிரினங்கள் மிக மிக சிறியவை.. நரம்பு மண்டலம் கூட இல்லாதவை.
200 மில்லியன் ஆண்டுகளில் முன்னேற்றம்
ஆனால் அடுத்த 200 மில்லியன் ஆண்டுகளில் இந்த உயிரினங்கள் ஒளியைப் பார்க்கும் திறன் வெகுவாக மேம்பட்டுள்ளது. வேகமாகவும், துல்லியமாகவும், பார்க்கக் கூடிய திறனை இவை பெற்றன.
கண் வந்தது 50 கோடி ஆண்டுக்கு முன்புதான்
ஆனால் உண்மையான கண்கள் வந்தது 50 கோடி ஆண்டுகளுக்கு முன்புதானாம். இதைத்தான் இந்த ஆஸ்திரேலிய ஆய்வு விளக்கியுள்ளது. ஒளி உணரும் செல்கள் உள்ளிட்டவை தோன்றியுள்ளன. இதுதான் மனித இனத்தின் மிகப் பெரிய வளர்ச்சிக்கு பெரும் உத்வேகமாக இருந்துள்ளது.