காங்.குக்குத் தாவும் விஜயசாந்தி.. கடுப்பில் டிஆர்எஸ்.. கட்சியிலிருந்து சஸ்பெண்ட்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநில அறிவிப்பு வெளியானதுமே தனக்கு இதுவரை அடைக்கலமும், முகவரியும் கொடுத்து வந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸுக்குத் தாவ முடிவு செய்து விட்ட விஜயசாந்தி மீது அக்கட்சி கடும் கோபமடைந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.
மேடக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயசாந்தி காங்கிரஸில் சேர தீர்மானித்துள்ளார். விஜயசாந்தியின் இந்த சந்தர்ப்பவாத முடிவால் டிஆர்எஸ் கட்சி கடும் கோபமடைந்துள்ளது.
இத்தனை காலம் தனக்கு முகவரியும், அடையாளமும் கொடுத்து வந்த டிஆர்எஸ்ஸுக்கு அவர் துரோகம் இழைத்து விட்டதாக அக்கட்சியினர் வர்ணித்துள்ளனர்.
கட்சியிலிருந்து சஸ்பெண்ட்
விஜயசாந்த்தியை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி தற்போது டிஆர்எஸ் முடிவெடுத்துள்ளது.
கட்சி விரோத நடவடிக்கை
விஜயசாந்தியின் செயல் கட்சி விரோத நடவடிக்கை என்று வர்ணித்துள்ள அக்கட்சி அவரை சஸ்பெண்ட் செய்யும் முடிவை இன்று கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் கூடி எடுத்தது.
நோட்டீஸ் போகிறது
விஜயசாந்தியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும். அவரது பதில் கிடைத்தவுடன் டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஆர்எஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தனிக்கட்சி நடத்த முடியாமல் வந்தவர்
தெலுங்கானா பகுதியைக் குறி வைத்து தனியாக கட்சி தொடங்கி நடத்தியவர்தான் விஜயசாந்தி. ஆனால் சந்திரசேகர ராவுக்கு தெலுங்கானா பகுதியில் இருந்து வரும் அசைக்க முடியாத செல்வாக்கைப் பார்த்து பயந்து போய் தனது கட்சியை ராவ் கட்சியுடன் இணைத்து செயல்பட்டு வந்தார்.
முதல் ஆளாக காங்கிரஸுக்கு ஓட்டம்
தற்போது டிஆர்எஸ் கட்சியையே காங்கிரஸுடன் இணைக்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். ஆனால் ஆளுக்கு முந்தியாக விஜயசாந்தி அந்தக் கட்சிக்கு ஓட முடிவெடுத்ததால் கடுப்பாகியுள்ளது டிஆர்எஸ்.