தீ விபத்தில் 3 குழந்தைகளை பறிகொடுத்த நியூசிலாந்து தம்பதிக்கு இரட்டை குழந்தை
நியூசிலாந்தைச் சேர்ந்தவர் மார்டின் வீக்ஸ். அவரது மனைவி ஜேன். ஜேன் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர்களுக்கு லில்லி, ஜாக்சன், வில்ஷர் என்று பெயர் வைத்தனர். கடந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதி அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தோஹாவில் உள்ள வில்லேஜியோ மாலுக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் ஜேனின் 3 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கவனக்குறைவால் தீ விபத்து ஏற்படக் காரணமாக இருந்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் ஜேன் மீண்டும் கர்ப்பமானார். ஆக்லேண்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட ஜேன் நேற்று இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் பிறந்த அந்த குழந்தைகளுக்கு பாப்பி, பார்கர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மார்ட்டினின் இரண்டாவது மனைவி தான் ஜேன். முதல் மனைவி மூலம் மார்ட்டினுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.