இந்தியாவில் கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் 12ம் தேதி அறிமுகம்
டெல்லி: இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் வரும் 12ம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே தங்கள் நாட்டில் கட்டப்பட்ட போர்க்கப்பல்களை வைத்துள்ளன. இந்நிலையில் இந்தியா ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர்க்கப்பலை உள்நாட்டில் கட்டியுள்ளது. முதன் முதலாக உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி கப்பல் வரும் 12ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த அறிமுக விழா கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் இடத்தில் நடக்கிறது. 40,000 டன் எடையுள்ள இந்த கப்பலை இந்திய கடற்படையின் டிசைன் அமைப்பு வடிவமைத்துள்ளது. கப்பலில் 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்படுகிறது. கப்பலில் தரையில் இருந்து வானில் பறக்கும் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் இருக்கும்.
இந்த அதிநவீன கப்பலை கட்டியதன் மூலம் சொந்த நாட்டில் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டிய 5வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.