எம்.பி.,எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல்வாதிகள்
டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஓரணியாக நின்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தை அமைதியாக நடத்துவது பற்றி பேசுவதற்காக நேற்று அனைத்து கட்சி கூட்டம் கூடியது. அப்போது, நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்தும், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவும் கோரப்பட்டது.
அப்போது பேசிய அனைத்து கட்சி எம்.பிக்களும், குற்றப் பின்னணி கொண்டவர்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக நீடிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்தனர். இது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.
குற்றப்பின்னணி உடைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் , தேர்தலில் போட்டியிடக் கூடாது' என, அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8 (4)ன் படி, "கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களை, தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்கு அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து நீக்க முடியாது. இந்த சட்டப் பிரிவு, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக இருப்பதுடன், குற்றப் பின்னணி உடையவர்கள், தேர்தலில் போட்டியிடுவதை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது.
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், மேல் முறையீடு செய்வதன் மூலம், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., பதவிகளில் தொடர்ந்து நீடிப்பதுடன், அனைத்து சலுகைகளையும் பெறுகின்றனர். இந்த சட்டப் பிரிவை, ரத்து செய்வதுடன், அதில் திருத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக்,முகேபாத்யா ஆகியோர், சட்டப்பிரிவு 8(4) செல்லாது எனவும், தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களின் பதவி உடனே பறிக்கப்படும்
மேலும், அவர்கள் குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை தேர்தலில் போட்டியிட கூடாது என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுபவர்கள் தவிர மற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்புக்கு அனைத்து கட்சி எம்.பி.க்களும் கடும் அதிருப்தி வெளியிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஆட்சி நடத்த வேண்டுமானால், ஆட்சிபொறுப்பை உச்சநீதிமன்றமே எடுத்துக் கொள்ளலாம் எனவும் கருத்து வெளியிட்டனர். மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவரும் , எம்.பி.யுமான லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், ஜனநாயகத்தில் பார்லிமென்ட் தான் உயர்ந்தது என்றார்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களி்டம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல் நாத், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்றும் பிரதிநிதித்துவ மக்கள் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர அனைத்து கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளன என்றும் கூறினார்.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், இம்மாதம், 5ம் தேதி துவங்கி, 30ம் தேதி நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.