பாக். சிறையில் கொல்லப்பட்ட இந்திய கைதி சரப்ஜித் சிங் மகள் சப் கலெக்டர் ஆனார்…: பஞ்சாப் அரசு கௌரவம்
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி இந்தியரான சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி சிறையில் இருந்த அவர், கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.
இதையடுத்து லாகூர் நகரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சரப்ஜித் சிங், கடந்த மே மாதம் 2ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சரப்ஜித் சிங்கின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பஞ்சாப் மாநில அரசு 3 நாள் துக்கம் கடைபிடித்தது. அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கியது. சரப்ஜித் சிங்குக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், 'சரப்ஜித் சிங் மகளுக்கு அரசு வேலை வழங்கப்படும்' என உறுதியளித்தார்.
அதன்படி சரப்ஜித் சிங்கின் மகள் சுவபன்தீல் கவுரை உதவி கலெக்டராக நியமித்து பஞ்சாப் முதல்வர் இன்று உத்தரவிட்டார். இதற்கான பணி நியமன ஆணையை அவரிடம் வழங்கி வாழ்த்திய முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ‘நாட்டிற்காக சரப்ஜித்சிங் செய்த மிகப்பெரிய தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அவரது மகளை இந்த பதவியில் அமர்த்தி பஞ்சாப் அரசு காணிக்கை செலுத்துகிறது' என்றார். ‘ஒரு இந்தியர் என்பதற்காகவே பாகிஸ்தான் ஜெயிலில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த சரப்ஜித் சிங் ஒரு தேசிய தியாகி' என்றும் அவர் கூறினார்.