தெலுங்கானா.. 'அங்கிட்டு கோடீஸ்வர சாமிகள்.. இங்கிட்டு கல்வி நிறுவனங்கள்'
ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்து தெலுங்கானா உருவாகும் நிலையில் எந்த பிரதேசத்துக்கு லாபம்? நட்டம்? என்ற கணக்கும் பார்க்கப்பட்டு வருகிறது.
நாட்டின் 29வது புதிய மாநிலமாக தெலுங்கானா உருவாக இருக்கிறது. இது கடலோர ஆந்திர, ராயலசீமா பகுதிகளில் கடும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. தெலுங்கானா உருவாக்கத்துக்கான காங்கிரஸின் முடிவை எதிர்த்து முழு அடைப்புப் போராட்டம் வன்முறை வெடித்துள்ளன.
இதனிடையே தெலுங்கானா, ஆந்திரா பகுதிகளில் உள்ள 'வளம்' பற்றிய கணக்குகளும் பட்டியலிடப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கில் தெலுங்கானாவில் முக்கிய கல்வி நிறுவனங்களும் ஆந்திராவில் கோடீஸ்வர கோயில்களும் ஒதுங்கியுள்ளன.
ஐஐஐடிக்கள்
முக்கிய கல்வி நிறூவனங்களான ஐஐடி மேடக், என்.ஐ.டி வாரங்கல், ஐ.எஸ்.பி. கட்சிபெளலி, பி.ஐ.டி.எஸ். பிலானி வளாகம், என்.ஐ.எப்.டி. ஹைதராபாத் வளாம்- மடபூர், நல்சார் சட்ட பல்கலைக் கழகம் போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. இவை அனைத்துமே தெலுங்கானாவில்தான் இருக்கின்றன.
பல்கலைக் கழகங்கள்
மத்திய பல்கலைக் கழகங்களான ஹைதராபாத் பல்கலைக் கழகம், ஆங்கிலம்,வெளிநாட்டு மொழிகள் பல்கலைக் கழகம் ஆகியவையும் தெலுங்கானாவில்தான் இருக்கின்றன.
இனி விசாகப்பட்டினம், சித்தூரில்?
இப்படி முக்கிய பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் தெலுங்கானாவில் ஒதுங்கிவிட்டதால் விசாகப்படினத்தில் ஐஐஎம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படலாம். இதேபோல் சித்தூரில் ஐஐஐடி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது. மத்திய பல்கலைக் கழகம் ஒன்றும் எஞ்சிய ஆந்திராவுக்கு கிடைக்கலாம்.
அங்கிட்டு கோடீஸ்வர சாமிகள்...
அதேநேரத்தில் ஆண்டு வருமானம் ரூ10 கோடிக்கு அதிமாகக் கொடுக்க 10 கோயில்களில் 7 ஆந்திராவில்தான் இருக்கின்றன. கடந்த ஆண்டு ரூ2010 கோடி வருவாய் கொடுத்த திருப்பதியும் ஆந்திராவில்தான் இருக்கின்றன.
ஆந்திராவில் எந்தெந்த கோயில்கள்?
ஆண்டுக்கு ரூ40 கோடி கொடுக்கும் காளஹஸ்தி, ஆண்டுக்கு ரூ65 கோடி கொடுக்கும் விஜயவாடா துர்கமல்லேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீசைலம், போன்றவை எல்லாமே 'ஆந்திராவில்' இருக்கின்றன. இதேபோல் விசாகப்பட்டினம் நரசிம்ஹ ஸ்வாமி தேவஸ்தானம், அன்னாவரம் ஸ்ரீ வேங்கட சத்யநாரயண ஸ்வாமி போன்றவையும் ஆந்திராவிலேயே இருக்கின்றன,
ஆக கல்வியா? செல்வமா? என்ற போட்டிதான் இது!