மதுரை அருகே சத்துணவு சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழப்பு
மதுரை: மதுரை அருகே சோழவந்தானில் சத்துணவு சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது திருமால்நத்தம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். கயிறு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். இவரது ஒரே மகன் ஆகாஷ் (2). அங்குள்ள அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் ஆகாஷ் உள்ளிட்ட 9 சிறுவர்களுக்கு அங்கன்வாடிப் பணியாளர் ஜெயலட்சுமி மதிய உணவைப் பரிமாறியுள்ளார். உணவை உண்ட சிறிது நேரத்தில் சிறுவன் ஆகாஷ் வாந்தி எடுத்து மயக்கமடைந்தான்.
இதையடுத்து ஆகாஷை சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்துள்ளனர். பின்பு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தைகள் நலப்பிரிவில் ஆகாஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனையடுத்து சோழவந்தான் போலீசார் அங்கன்வாடிப் பணியாளர் ஜெயலட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கன்வாடியில் மீதமிருந்த உணவின் மாதிரியைச் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.