கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் திருடர்களா.. எஸ்.பி.ஐ வங்கியின் அநாகரீக செயல்
மதுரை: தேனி மாவட்டம் போடி ஸ்டேட் வங்கிக் கிளையில் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் புகைப்படங்களை வங்கிகளின் வாசலில் ஒட்டி வைத்து அசிங்கப்படுத்தியுள்ளனர்.
மாணவர்களை ஏதோ ஜேப்படி திருடர்களைப் போல அவமானப்படுத்தும் அடாவடித்தனத்தில் இறங்கியுள்ள வங்கியின் இந்த செயலால் மக்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
கடன் தள்ளுபடியை ஏப்பம் விட்ட கும்பலோடு,வங்கியில் தொழில்கடன் வாங்கி ஏப்பம் விட்டுள்ள விஜய் மல்லையா போன்ற தரகு முதலாளிகளோடு இணக்கமாகவும், அக்கொள்ளையில் பங்காளியாவும் நடந்துவரும் வங்கி நிர்வாகம், சிறு மாணவர்களைக் கிள்ளுக்கீரைகளாக நடத்துவதையும் எட்டி உதைப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
மேலும் உழைக்கும் மக்கள் எதுவும் கேட்க மாட்டார்கள் கேட்பதற்கு துணிவு இல்லாதவர்கள் என்ற திமிருடன் தான் இந்த வங்கிகள் செயல்படுகின்றன என்பதை இந்த விவகாரங்கள் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளன.
போடி ஸ்டேட் வங்கியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.