மேட்டூர் அணை திறப்பு: 12000 கன அடி நீர் வெளியேற்றம்… விவசாயிகள் மகிழ்ச்சி
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள உபரி நீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் நீர் மட்டம் தற்போது 109 அடியை எட்டியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் 11 அடிகளே பாக்கியுள்ளன. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் இருந்து இன்று பகல் 12:30 மணிக்கு அமைச்சர்கள் பூஜை செய்து அணையை திறந்து விட்டனர். குடிநீருக்காகவும், ஆடிப்பெருக்கு விழாவிற்கும் சேர்த்து விநாடிக்கு 10,000 கனஅடிநீர் திறக்கப்பட்டிருந்தது. தற்போது பாசனத்திற்கும் சேர்த்து விநாடிக்கு 12000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக அதிகரிக்கப்படும்.
மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக பாசனத்திற்கு ஜூன் 12 ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு தாமதமாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இது வரை 26 முறை குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டுள்ளது. 11 முறை முன்கூட்டியும் ,53 முறை தாமதமாகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது
மேட்டூர் அணையின் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது இது 80-வது முறையாகும். இன்று முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.