அண்ணாமலை பல்கலை மாணவியர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் கைது
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் பாப்பாநாட்டைச் சேர்ந்த தனபால் மகன் தனுஸ்ரீ (17), மயிலாடுதுறை அருகே வானதிராஜபுரத்தைச் சேர்ந்த பீட்டர் குணசேகரன் மகள் பியுலா மெர்லின் தேவப்பிரியா (17) இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ரோஸ் ஹாஸ்டலில் தங்கி பிஇ (எல்க்ட்ரானிக் சயின்ஸ்) இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரிடம் கடந்த சில வாரங்களாக பொறியியல் புலத்தில் பணியாற்றும் சிதம்பரம் பொன்மயில் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் பேராசிரியர் ஜி.மோகன் (50) பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியர்கள் இருவரும் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இரு மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளனர். அப்போது இரு மாணவியர்களையும் பேராசிரியர் மோகன் தனது அறைக்கு அழைத்துள்ளார். அறைக்கு சென்ற இரு மாணவியர்களிடம் அருகே உள்ள புத்தூர் ஹோட்டலுக்கு வருமாறு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை பார்த்த அவர்களை பின்தொடர்ந்து சென்ற பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பேராசிரியர் பிடித்து அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் மாணவியர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.