பல ஆண்டுகளாக தேடப்பட்ட கேரள ‘சிமி’ தீவிரவாதி டெல்லியில் கைது
டெல்லி: கடந்த பல ஆண்டுகளாக தேசிய புலனாய்வு துறையால் தேடப் பட்டு வந்த சிமி தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதி, நேற்று முன் தினம் டெல்லியில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளான்.
கடந்த 2007ம் ஆண்டு, கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த வாகாமண் என்ற இடத்தில் ரகசியமாக முகாமிட்டிருந்தனர் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினர். சுருக்கமாக சிமி என அழைக்கப்பட்ட இந்த இயக்கத்தினர் துப்பாக்கி சுடுதல், கயிற்றில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கடந்து செல்லுதல், மலையேற்றம், மோட்டார்சைக்கிள் பயிற்சி, பெட்ரோல் குண்டு தயாரித்தல் போன்ற இந்திய அரசுக்கு எதிராக போர் பயிற்சிகளை ரகசியமாக் மேற்கொண்டு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தேசிய புலனாய்வு படையினர், இந்த இயக்கத்தைச் சேர்ந்த 38 பேர் மீது எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதில் முக்கிய குற்றவாளியாக அப்துல் சத்தார் என்ற தீவிரவாதியைத் தேடி வந்தனர்.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, நேற்று முன் தினம் டெல்லியில் வைத்து அப்துல் சத்தாரையும், அவருடன் இருந்த 35 தீவிரவாதிகஆளியும் கைது செய்துள்ளது தேசிய புலனாய்வுப் படை. தலைமறைவாக உள்ள மீதமுள்ள 3 தீவிரவாதிகளைத் தேடும் பணித் தொடர்கிறது.