துர்கா ஐஏஎஸ்ஸுக்கு 10 பக்க குற்றப்பத்திரிக்கை: நிர்வாகத் திறனே இல்லை என்று குற்றச்சாட்டு
லக்னோ: உத்தர பிரதேச ஐஏஎஸ் அதிகாரி துர்காவிடம் 10 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அம்மாநில அரசு அளித்துள்ளது.
உத்தர பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால்(28). யமுனை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தார். இதனால் ஆளும் சமாஜ்வாடி கட்சியினரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்.
இந்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மசூதி ஒன்றின் சுற்றுச்சுவரை இடிக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சோனியா கடிதம்
துர்காவுக்கு நீதி கிடைக்குமாறு செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். சோனியா கடிதம் எழுதியது சமாஜ்வாடி கட்சியினரை கடுப்படையச் செய்துள்ளது.
10 பக்க குற்றப்பத்திரிக்கை
துர்காவுக்கு 10 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நேற்று மாலை மாநில அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ரமலான் மாதத்தில் மசூதி சுவரை இடிக்க உத்தரவிட்டது தவறு. துர்காவுக்கு நிர்வாகத் திறமை இல்லை. முதலில் அவர் அந்த சுவரை கட்டவிட்டிருக்கக் கூடாது. இல்லை என்றால் ரமலான் முடியும் வரை காத்திருந்து அதன் பிறகு அவர் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும்
மசூதியின் சுற்றுச் சுவரை இடிக்கும் முன்பு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இப்படி புனித மாதமான ரமலானில் மசூதியின் சுற்றுச் சுவரை இடித்து அப்பகுதியில் சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் துர்கா நடந்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துர்கா 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
பிரதமர்
விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகள் துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஷயத்தில் பின்பற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.