ஆடிப் பெருக்கில் விபரீதம்... பல்வேறு ஊர்களில் நீரில் மூழ்கி 10 பேர் பலி
நாமக்கல்: ஆடிப் பெருக்கின்போது நீர்நிலைகளில் புனித நீராடிய போது நீரில்மூழ்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் காவிரி ஆறு மற்றும் அதன் கால்வாய்களில் குளித்தபோது உயிரிழந்துள்ளனர். ஆடிப் பெருக்கின்போது நீர்நிலைகளில் குறிப்பாக ஆறுகளில் புனித நீராடி வழிபடுவது வழக்கமாகும். இந்த ஆண்டு ஆடிப்பெரு்க்கின்போது குடும்பம் குடும்பமாக மக்கள் நீர்நிலைகளுக்குச் சென்று வழிபட்டனர். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் அங்கு தாலி மாற்றிக் கொண்டனர்.
இந்த வழிபாட்டின்போது நீரில் மூழ்கி 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் விசைத்தறி தொழிலாளி மாதேஸ்வரன் (25), ராஜூ ஆகியோர் நீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதில் மாதேஸ்வரன் உடல் கிடைத்துள்ளது. ராஜு நிலை தெரியவில்லை.
இதேபோல, தர்மபுரி மாவட்டம் நெருப்பூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் அருள்குமார் (17) மேட்டூர் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாக்கு தைக்கும் தொழிலாளி முருகன் (37) என்பவர், நண்பர்களுடன் மது குடித்து விட்டு மூலப்பாறை என்னுமிடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது முருகன் ஆற்றில் மூழ்கி இறந்தார்.
தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி அருகே ஊர்காவல் படை வீரர் பிரபு (23). நண்பர்களுடன் தேவர்முக்குலம் என்ற பகுதி குட்டையில் மேலிருந்து குதித்து குளிக்க முற்பட்டபோது கல் இடுக்கில் தலை அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவையாறு அடுத்த தென்பெரம்பூரில் வெண்ணாறு மதகு அருகில் நேற்று குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் சரவணன் (19), ராஜராஜன் ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கினர்.
கேரள மாநிலம் பாண்டிக்கடவு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் குஞ்சுஅப்துல்லா (65), மொய்து(63), அசன்ஹாஜி (60) சென்ற கார், முதக்கரை பகுதி பாலத்தை கடந்த போது வெள்ளம் அடித்து சென்றது. இதில் மொய்து, குஞ்சு அப்துல்லா, அசன்ஹாஜி, டிரைவர் சித்திக் ஆகியோர் உயிரிழந்தனர்.