இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...!
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் தனது முதல் ஓட்டத்தைத் தொடங்கப் போகிற நாள் கிட்டத்தட்ட வந்து விட்டது. இன்னும் 10 நாட்களில் கோயம்பேட்டில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதான் சென்னை மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டமாகும். இதை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை ஓட்டத்துக்குப் பின்னர் முதல் பாதையில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும் என்று தெரிகிறது.
பிரேசிலிலிருந்து வந்த பெட்டிகள்
பிரேசிலில் தயாரிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயிலின் 4 பெட்டிகள் கப்பல் மூலம் மே 31-ஆம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தன.
தண்டவாளத்தில் நிறுத்தம்
இந்தப் பெட்டிகள், கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 8 பெட்டிகள் வருகின்றன
இதேபோல மேலும் 2 மெட்ரோ ரயில்கள் (8 பெட்டிகள்) அடுத்த மாதம் கப்பலில் சென்னை வந்தடைகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 9 ரயில்களும் பிரேசிலில் இருந்து வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சோதனை ஓட்டம்
சென்னை மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் கோயம்பேடு பணிமனையில் முதல்கட்டமாக மேற்கொள்ளப்படும். இதற்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன.
கோயம்பேட்டில் 1900 மீட்டர் நீள தண்டவாளம்
கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயில்களை நிறுத்திவைப்பதற்காக இதுவரை 1,960 மீட்டர் நீளத்துக்கு தண்டவாளப் பணியும், 12,700 மீட்டர் நீளத்துக்கு மின்பாதை அமைக்கும் பணியும் முடிந்துள்ளன.
மின்பணிகள் முடிந்தன
மேலும் பணிமனையில் மின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. ரயில் பெட்டிகளில் உள்ள உதிரி பாகங்கள், உள் அமைப்புகள் சரியாக இருக்கின்றதா என்ற சோதனையும் சில நாள்களுக்கு முன்பு முடிவடைந்துவிட்டது.
சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பயணிகள் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்ற தேதி அறிவிக்கப்படும். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கும்.