மகளுக்கு சடங்கு வைக்கிறோம்.. சொல்லிச் சொல்லியே ரூ. 26 லட்சம் சுருட்டிய பெண்
அறந்தாங்கி: மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தப் போவதாக சொல்லி பலரிடம் ரூ. 26 லட்சம் பணம் சுருட்டிய பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தனது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தப் போவதாகக் கூறி, அக்கம் பக்கத்தாரிடம் இருந்து ரூ.1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை கடனாகக் கேட்டுப் பெற்றுள்ளார்.
மேலும் பூப்புனித நீராட்டு விழாவையொட்டி மொய் விருந்து வைக்கப் போவதாகவும், அதில் வசூலான பணத்தைக் கொண்டு உங்கள் கடனை அடைத்து விடுவதாகவும் கூறி பணம் கறந்துள்ளார்.
ஆனால் பூப்புனித நீராட்டு விழா முடிந்து 15 நாட்களாகியும் கண்டுக்காமல் இருந்துள்ளார். மேலும், தலைமறைவாகியும் விட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மாவட்ட எஸ்.பியை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி.உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகேஸ்வரியைத் தேடி வருகின்றனர்.