இஷ்ரத் ஜஹான் வழக்கு.. போலீஸ் அதிகாரி பிபி பாண்டேவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
இஷ்ரத் ஜஹான் என்ற மும்பை மாணவி உட்பட 4 பேர் சில ஆண்டுகளுக்கு முன்பு 'என்கவுன்ட்டர்' என்ற பெயரில் குஜராத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் அண்மையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் போலியான என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றம்சாடியிருந்தது.
இந்த போலி என்கவுன்ட்டருக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் பெயரையும் சிபிஐ தமது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது. இதனிடையே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தலைமறைவாகிப் போன போலீஸ் அதிகாரி பிபி பாண்டே தமக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவ விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் விசாரணை நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆம்புலன்சில் நீதிமன்றத்துக்கு வந்தார். அத்துடன் தம்மை போலீஸ் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரியும் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த அகமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் பிபி பாண்டே எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.