ஆறுகளில் மணல் அள்ள இனி சுற்றுச்சூழல் அனுமதி தேவை: தேசிய பசுமை தீர்ப்பாயம்
டெல்லி: நாடு முழுவதிலும் உள்ள ஆறுகளில் மணல் எடுப்பதற்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதியின்றி இனி மணல் அள்ளக்கூடாது எனவும் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
மணல் அள்ளுவது தேசிய முக்கியத்துவம் பொருந்திய பிரச்னை" என அத்தீர்ப்பாயம் மேலும் கூறியுள்ளது. இனிமேல், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் எந்தவொரு இடத்திலும் மணல் அள்ள உரிமம் தரக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் ஆணையிட்டனர்.
மேலும் மாநில சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதியின்றி எந்த ஆற்றிலும் மணல் அள்ளக்கூடாது. மணல் அள்ளும் விவகாரம் குறித்து ஆகஸ்ட்.14ம் தேதிக்குள் அனைத்து மாநில தலைமை செயலர்களும் பதில் தர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
ஆறுகளில் மணல் முறைகேடாக அள்ளுவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் மணல் கொள்ளைக்கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் நாடுமுழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது .