வாகனங்களில் சைரன்: முறைகேடாக பயன்படுத்தும் விஐபிக்களுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப் பிடி
டெல்லி: விஐபிக்களுக்கு அரசால் வழங்கப்படும் சிவப்பு சுழல் விளக்குகள், சைரன் ஆகியவை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் சிவப்பு சுழல் விளக்குகள் மற்றும் சைரன் ஒலி கருவி ஆகியவை முறைகேடாகப் பயன்படுத்துவது குறித்து, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபால கெளடா ஆகியோர் கூறியதாவது:
பாதுகாப்பு படையினர் புடைசூழ, முக்கிய பிரமுகர்கள் சிவப்பு சுழல் விளக்கு மற்றும் சைரன் வைத்த வாகனங்களில், சாலைகளில் செல்லும் போது, பொதுமக்களுக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்தச் செயல் சமுதாயத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு, கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பு சட்டப் பதவிகளை வகிக்கும் நபர்கள் மட்டுமே இவற்றை பயன்படுத்தும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும் என்றும், இதுகுறித்து இரண்டு வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு முன்பும் இந்த அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. சிவப்பு சுழல் விளக்கு, அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிட்டது என்று குறை கூறியது குறிப்பிடத்தக்கது.