மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றம்: கிலியில் அமைச்சர்கள்
விரைவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவை பலப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களிலும் கட்சியை பலப்படுத்த, அதிமுக முக்கிய நிர்வாகிகளுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் 39 இடங்களையும், புதுச்சேரியல் உள்ள ஒரு இடத்தையும் ஆக மொத்தம் 40 இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என அதிமுக தலைமை காய்களை நகர்த்தி வருகின்றது.
கடந்த அதிமுக ஆட்சியில் யாரும் எதிர்பாராத வண்ணம் அடிக்கடி அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது அதிமுக ஆட்சி அமைந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அது போல இல்லாமல் உள்ளது.
இந்தநிலையில் சில அமைச்சர்கள் மீது கட்சி தொண்டர்கள் கடும் புகார்களை கொடநாட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றார்களாம். இதைக் கண்ட முதல்வர் தொண்டர்களை அணுசரிக்காமல் செயல்பட்டால் எப்படி என்று சில அமைச்சர்களை மாற்றும் முடிவில் உள்ளாராம்.
மேலும், பல அமைச்சர்களின் செயல்பாடுகள் ஜெயலலிதாவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், தொடர்ந்து பல அமைச்சர்கள் மீது புகார் வந்து கொண்டு இருப்பதால் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயலாம் என்றும் கூறப்படுகின்றது.
இதற்காக ஜெயலலிதா வரும் 12ம் தேதி சென்னை வர உள்ளதாக கூறப்படுகின்றது. இன்று ஆடி அமாவாசை என்பதால் இன்று கூட அமைச்சரவை மற்றம் குறித்த தகவல் வெளியாகலாம்.