கல்விக்கடன் செலுத்தாவிட்டால் மாணவர்களின் படங்களை ஒட்டுவதா? கருணாநிதி கண்டனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
"கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்பதற்காக; அவர்களின் புகைப்படங்களை வங்கிக்கிளைகளின் வாசல்களில் "ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா" வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அது மிகவும் தவறான செயலாகும்; கண்டிக்கத்தக்கதாகும். மாணவர்களை இழிவுபடுத்தக்கூடிய ஒரு காரியமாகும்.
வங்கிகளில் கடன் பெற்ற எத்தனையோ பண முதலைகள் எல்லாம், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை செலுத்தாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில், ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்வி செலவிற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என்பதற்காக, இந்த நாட்டின் வருங்கால செல்வங்களான, அவர்களின் புகைப்படங்களை வங்கி கிளைகளின் வாசலில் வைப்பது என்பது அவர்களை அவமதித்து தாழ்த்துகின்ற செயலாகும். உடனடியாக மத்திய அரசும், வங்கியின் நிர்வாகமும் கூடிப்பேசி இதனை தவிர்க்கவேண்டும்.
ஏழை, எளிய மாணவ-மாணவியரின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கான உதவிகளை செய்யும் வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்திட முன்வர வேண்டும்" என்று கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.