குழந்தை கடத்தல்: மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன், டிஜிபிக்கு ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மதுரை அரசு மருத்துவமனை டீன்', தமிழக டிஜிபி, தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் மீனாட்சி என்ற பெண்ணிற்கு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையை, மருத்துவமனை ஊழியர் எனக் கூறி பெண் ஒருவர், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என எடுத்துச் சென்றுள்ளார்.
இதுவரை குழந்தை கிடைக்காததை அடுத்து மீனாட்சி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குழந்தையை மீட்டுத் தருமாறு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் சிபிசிஐடி.,க்கு இவ்வழக்கை மாற்றி தனது குழந்தையை மீட்டு தருமாறு தனது மனுவில் மீனாட்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ராஜேஸ்வரன், மதிவாணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கு தொடர்பாக 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மதுரை அரசு மருத்துவமனை டீன்'னுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இதுவரை எத்தனை குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து கடத்தப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி., மற்றும் தலைமை செயலருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு நீதிபதிகள். ஒத்தி வைத்தனர்.