டிஜிபி ராமானுஜத்தை பெல் விழாவில் தடுத்த அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்தவர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெல் நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொள்ள கடந்த 2ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் ஷீலா, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, எம்.பி குமார் உள்ளிட்டோர் பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற் றனர்.
அப்போது தமிழக டிஜிபி ராமானுஜம் பிரதமரை நோக்கி சென்றபோது, அங்கு நின்ற பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவான எஸ்.பி.ஜி அதிகாரி ஒருவர் டிஜிபியை தடுத்து நிறுத்தினார். பிரதமரை வரவேற்போர் பட்டியலில் பெயர் இருந்தும், சீருடையில் இருந்த தன்னை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த டிஜிபி, உடனே அங்கிருந்து திரும்பி சென்று விட்டார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பிரதமருக்கு கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா,அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, அந்த எஸ்பிஜி அதிகாரியின் பெயர் மற்றும் விவரங்கள் குறித்து தமிழக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த அதிகாரி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பதும், டெல்லியில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் சில ஆண்டுகளாக இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரே தமிழக டிஜிபியை அவமதித்துள்ளார் என்பது, தமிழக காவல்துறையினரை அதிரவைத்துள்ளது.