தாக்குதல் நடத்தியது பாக். தீவிரவாதிகள் என்பதா? இரவில் ஆண்டனி வீடு முற்றுகை!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த தீவிரவாதிகள் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி விளக்கம் அளித்ததைக் கண்டித்து அவரது வீடு நேற்று இரவு திடீரென பாஜகவினரால் முற்றுகையிடப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். இது தொடர்பால நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் நேற்று கொந்தளித்தனர்.
ஆண்டனி விளக்கம்
பெரும் அமளிக்கு இடையே இத்தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சர், பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த 20 தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நாடாளுமன்றத்திலேயே பாரதிய ஜனதா கட்சியின் அருண் ஜேட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
நூற்றுக்கணக்கானோர் திடீர் முற்றுகை
பின்னர் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் டெல்லியில் உள்ள ஏ.கே. ஆண்டனியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நகர மறுத்த போராட்டக்காரர்கள்
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தன. ஆனால் போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர்.
தண்னீர் பீய்ச்சி அப்புறப்படுத்தல்
இதனால் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனாலும் அசராத போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தபடியே முழக்கங்களை எழுப்பிவிட்டு கலைந்தனர். இதனால் ஆண்டனியின் வீட்டு பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது.