அமளிக்கிடையே உ.பா. மசோதா தாக்கல்! எல்லை பாதுகாப்புதான் முக்கியம்- சுஷ்மா!!
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கனவு திட்டமாக கருதப்படுகிற உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கான அண்மையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில் 2011ஆம் ஆண்டு மசோதாவை விலக்கிக் கொண்டு புதிய உணவு பாதுகாப்பு மசோதாவை அமைச்சர் கே.வி.தாமஸ் தாக்கல் செய்தார்.
மசோதா தாக்கல் செய்யப்பட்ட அறிமுக நிலையிலேயே அதிமுக எம்.பி. இதை நிராகரித்தார். இது உணவுப் பாதுகாப்பு மசோதா அல்ல.. உணவு பாதுகாப்பின்மை மசோதாதான் என்று சாடினார். திமுகவின் டி.ஆர்.பாலுவும் தற்போதைய வடிவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து எழுந்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இப்போது உணவுப் பாதுகாப்பை விட எல்லைப் பாதுகாப்புதான் முக்கியம்.. பாதுகாப்புத் துறை அமைச்சரை சபைக்கு வந்து அவரது தவறான அறிக்கைக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதர பாஜக எம்.பிக்களும் குரல் எழுப்ப அமளிக்காடானது.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா எம்.பிக்களும் ஒருபக்கம் தொடர்ந்தும் குரல் எழுப்ப உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சபை ஒத்திவைக்கப்பட்டது.