பாக். தாக்குதலில் பலியான 4 பீகார் வீரர்களுக்கு ரூ10 லட்சம் நிதி உதவி!
பாட்னா: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் பலியான 4 பீகார் வீரர்களுக்கு தலா ரூ10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஊடுருவிய பாகிஸ்தான் சீருடை அணிந்த குழு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டது. இதில் ராணுவ அதிகாரி ஒருவரும், பீகார் ரெஜிமெண்ட் படைப்பிரிவைச் சேர்ந்த 4 வீரர்களும் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலியான பீகார் ரெஜிமெண்ட்டின் 4 ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த வீரர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.