தர்மபுரி இளவரசன் தற்கொலைதான் செய்து கொண்டார்- எஸ்.பி. அறிக்கை
சென்னை: தர்மபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை. அவரது மரணம் தற்கொலைதான் என்று தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் தீவிர விசாரணை, பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை மேற்கோள் காட்டி காவல்துறை இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
ஜூலை 4ம் தேதி மரணம்
ஜூலை 4ம் தேதி தர்மபுரி அரசினர் கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே இளவரசனின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கொலையா.. தற்கொலையா
முதலில் இது தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை இளவரசனின் குடும்பத்தினரும் மற்றவர்களும் எழுப்பினர்.
2 முறை பிரேதப் பரிசோதனை
மேலும் பிரேதப் பரிசோதனை குறித்து இளவரசன் குடும்பத்தினர் பல்வேறு சந்தேகங்களையும், ஆட்சேபனைகளையும் எழுப்பியதால் 2வது பிரேதப் பரிசோதனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரும்புப் பொருள் தாக்கி மரணித்திருக்கலாம்
2வது பிரேதப் பரிசோதனையை நடத்திய எய்ம்ஸ்ட்டாக்டர்கள் குழு தாக்கல் செய்த அறிக்கையில், இரும்புப் பொருள் தலையில் பலமாக தாக்கியதால்தான் மரணம் நிகழ்ந்திருக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.
எஸ்.பியின் அறிக்கை
இந்த நிலையில் இந்த வழக்கின் நிலவரம் குறித்த நிலவர அறிக்கையை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
கொலை என்பதற்கு ஆதாரம் இல்லை
அதில், இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில், இளவரசன் கொல்லப்பட்டார் என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் இளவரசன் மரணம் கொலைதான் என்ற சந்தேகம் எழுவதற்கான எந்த சூழ்நிலையும், காரணியும் முற்றிலும் இல்லை.
மது அருந்தியுள்ளார்
மரணத்திற்கு முன்பு இளவரசன் மது அருந்தியுள்ளது 2 பிரேதப் பரிசோதனையிலும் நிரூபணமாகியுள்ளது. மேலும் மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வந்த ரயில் மோதியதால்தான் இப்படி காயம் ஏற்பட்டிருப்பதாக காவல்துறை நம்புகிறது.
எய்ம்ஸ் டாக்டர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்
காவல்துறையினரின் இந்த சந்தேகத்தை நேரடியாக ஆய்வு மேற்கொண்ட எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரும் கவனத்தில் எடுத்துக் கொண்டனர். ரயில் மோதியதால்தான் இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்களும் கூறியுள்ளனர்.
துன்புறுத்தப்படவி்ல்லை
மற்றபடி, இளவரசன் துன்புறுத்தப்பட்டதற்கான, சித்திரவதை செய்யப்பட்டதற்கான, அடித்து காயப்படுத்தப்பட்டதற்கான எந்த தடயமும் அவரது உடலில் இல்லை.
கையெழுத்து அவருடையதுதான்
மேலும் இளவரசன் எழுதியதாக கூறப்பட்ட கடிதங்களில் உள்ளது அவரது கையெழுத்துதான் என்பதை தடயவியல் நிபுணர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த கடிதத்தில், திவ்யா மீது தான் வைத்திருந்த ஆழமான காதலை வெளிப்படுத்தியிருந்தார் இளவரசன்.
நானே பொறுப்பு
மேலும் தனது கடிதத்தில், தனது மரணத்தை தானே தேடிக் கொள்வதாகவும், இதற்கு யாரும் பொறுப்பில்லை என்றும் இளவரன் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்களிடம் பேசிய இளவரசன்
இளவரசன் தனது மரணத்திற்கு முன்பு நண்பர்களிடம் பேசுகையில், திவ்யா தன்னுடன் வாழ மறுத்து விட்டதால் தான் மிகவும் அப்செட்டாக இருப்பதாக கூறியுள்ளார்.
புளிய மரத்திற்குக் கீழ் அமர்ந்து மது அருந்தினார்
தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின்புறம் உள்ள தண்டவாளப் பகுதியில் புளிய மரம் ஒன்றிற்குக் கீழே அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
தற்கொலை முடிவு
அதன் பின்னர் தற்கொலை முடிவை அமல்படுத்தியுள்ளார்.
தாஜ்மஹால் போல நினைவுச் சின்னம்
தனது தற்கொலைக்கு முன்பு அவர் தனது நண்பருடன் பேசுகையில், தனது மறைவுக்குப் பின்னர் தாஜ் மஹால் போல நினைவுச் சின்னம் எழுப்புமாறு கூறியுள்ளார்.
தனியாகத்தான் இருந்தார்
தற்கொலை செய்யும் முடிவுடன்அவர் தண்டவாளப் பகுதிக்கு வந்தபோது அவர் மட்டும்தான் அந்த இடத்தில் இருந்துள்ளார். அவருடன் யாரும் இல்லை என்று அஸ்ரா கார்க்கின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி பேச்சுக்கள்
இந்த அறிக்கையுடன், இளவரசனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி பேச்சுக்கள் குறித்த ஆதாரங்கள், இளவரசனின் செல்போன் பேச்சு குறித்த தடயவியல் நிபுணர்களின் ஆய்வறிக்கை, இளவரசன் திவ்யா இடையிலான பேச்சு ஆதாரம், இளவரசனுக்கும், உறவினர் அறிவழகனுக்கும் இடையிலான பேச்சு ஆதாரம் உள்ளிட்டவையும் இணைக்கப்பட்டுள்ளது.