லீவு போட்டுட்டு படிக்க போகக் கூடாது… ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பி.எட். படிப்பு படிக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
"அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் பி.எட். படித்த காலங்களை விடுமுறை விடுப்பு நீங்கலாக, அவர்களின் கணக்கில் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு மற்றும் சொந்த அலுவலின் பேரில் ஈட்டா விடுப்பு வழங்கியும் அந்த விடுப்புகள் போக மீதி நாட்களுக்கு ஊதியமில்லா விடுப்பு வழங்கியும் முறைப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த அனுமதியானது அரசாணை வெளியிடப்படும் நாளுக்கு முந்தைய நாளில் (22.7.2013) நேரடி சேர்க்கை மூலம் பி.எட். படித்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொலைதூரக்கல்வி மூலம் பி.எட். படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகள் படிக்க ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பில் செல்ல அனுமதி வழங்கி அவர்கள் நேரடி சேர்க்கை மூலம் படிக்க செல்வதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் பி.எட், பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்க அனுமதி வழங்குவதை தவிர்க்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அறிவுறுத்தப்படுகிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.