சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு நிபந்தனை தளர்வு- கருணாநிதி எதிர்ப்பு!
சென்னை: சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கான நிபந்தனைகளை தளர்ச்சி இருக்கும் மத்திய அரசின் நடவடிக்கை சரியில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் 'கேள்வி- பதில்' பாணியிலான அறிக்கை:
கேள்வி: இந்தியாவில் கடை திறக்கும் அந்நியருக்கு எந்த நிபந்தனையும் கிடையாது என்று இந்திய அரசு உறுதி அளித்திருப்பது சரியா?
பதில்: சரியில்லை என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறோமே? சில்லரை வணிகத்தில் அந்நியப் பெரும் நிறுவனங்களை அனுமதிக்க முடிவு செய்த இந்திய அரசு, முன்னர் இருந்த பல்வேறு நிபந்தனைகளையும் தற்போது தளர்த்தி அறிவித்துள்ளது.
இந்தியாவில் சில்லரை வணிகத்தில் சுமார் இருபது கோடி மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு அதன் மூலம் கிடைத்திடும் வேலைவாய்ப்பினால் வாழ்வாதாரத்தைப் பெற்றுள்ளார்கள்.
மத்திய அரசின் நிபந்தனைகள்
இந்தியாவில் அங்காடிகளைத் திறக்க வரும் அந்நிய வர்த்தகக் கம்பெனிகள், தங்களது முதலீட்டில் 30 சதவிகிதத்தை அந்தக் குறிப்பிட்ட சில்லரை வர்த்தகத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒரு முக்கிய நிபந்தனையாகும். அடுத்து, அந்நிய சில்லரை வர்த்தகக் கம்பெனிகள் விற்பனை செய்கின்ற பொருள்களில், முப்பது சதவிகிதம் உள்நாட்டு சிறு, குறு தொழிற்சாலை களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை.
நகரங்களில் மட்டும் அங்காடிகள்
அடுத்து, சில்லரை வியாபாரத்தின் வாயிலாக கடை திறக்க முற்படும் அந்நியக் கம்பெனிகள், பத்து இலட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே தங்கள் கடைகளைத் திறக்க வேண்டும் என்பது மேலும் ஒரு நிபந்தனை. ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளையும் தளர்த்த வேண்டுமென்று அந்நியப் பெரு முதலாளிகள் இந்திய அரசிடம் நெருக்கடி கொடுத்துவந்தார்கள்.
நிபந்தனைகள் முழுவதும் தளர்வு
இதன் காரணமாக 1-8-2013 அன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், அந்நியக் கம்பெனிகளுக்கு ஆதரவாக, சில்லரை வர்த்தகத் துறையில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளையெல்லாம் முற்றிலுமாகத் தளர்த்துவது என்று முடிவு செய்தது. இந்த முடிவினை மத்திய அமைச்சரவையும் ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது.
எப்போதும் எதிர்ப்பு
அந்நிய நேரடி முதலீடு ஆபத்தின் உச்சக் கட்டம் என்ற தலைப்பில் கடந்த 21-7-2013 அன்று நான் எழுதிய உடன்பிறப்பு மடலில், இலட்சக் கணக்கான சில்லரை வணிகர்களையும், நுகர் வோர் என்னும் நிலையிலே இருந்து பொருள்களை வாங்கிப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான சாதாரண ஏழையெளிய நடுத்தர மக்களையும் ஒரே நேரத்தில் பாதிக்கக் கூடியது சில்லரை வணிகத்தில் அன்னிய நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
பொருளாதார சரிவுக்குக் காரணம்
மேலும் நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு, அதுவும் ஒரு மூல காரணமாக ஆகிவிடும் என்பதையும், மத்திய அரசு அந்த முடிவை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது என்பதையும், எடுத்து விளக்கியதோடு; சில்லரை வாணிபத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை மாநிலங்களிலும் அமல்படுத்துவது என்ற நிலையை வற்புறுத்தாமல்; வற்புறுத்தாதது மட்டுமல்ல; ஆலோசனையாகக் கூடக் கூறாமல்; இதுகுறித்து, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் கருத்துக்கும் - வணிகப் பெருமக் களின் ஒருமித்த கோரிக்கைக்கும் இசைவளித்து உடனடியாக இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டதை, 28-11-2012 தேதியிட்ட என்னுடைய அறிக்கையை எடுத்துப் படித்துப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஆகாது என்று தி.மு.கழகம் தொடக்கத்திலேயே மேற்கொண்ட நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.