சென்னையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி! 5 அடுக்கு பாதுகாப்பு!
சென்னை: சென்னையில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகை வந்தார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னை தரமணியில் உள்ள வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆராய்ச்சி அறக்கட்டளை 25 ஆண்டுகளைக் கடந்து வெள்ளி விழாவைக் கொண்டாடியது. இதன் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஆராய்ச்சி அறக்கட்டளை அமைந்துள்ள தரமணியில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. இநிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேருரை ஆற்றினார்.
இதில் கேரள முதல்வர் உம்மண் சாண்டி, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் கே.தாமோதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின் திருவான்மியூரில் பிரபல நாட்டியக் கலைஞர் ருக்மணி தேவியின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி கலாஷேத்ரா ருக்மணி அரங்கத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தலைமை வகித்தார்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னை நகரில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.