முதியோர் பென்ஷனை வாரிச் சுருட்டி வாயில் போட்ட தாசில்தார் சஸ்பெண்ட்
தூத்துக்குடி: முதியோர் பென்சன் திட்டத்தில் முறைகேடு செய்ததாக விளாத்திகுளம் தாசில்தார் செல்வகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். இவர் பணியில் இருந்த போது தகுதி இல்லாத பலருக்கு முதியோர் பென்சன் வழங்கியதாகவும், இதன் பொருட்டு போலி ஆவணங்கள் தயார்செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து கலெக்டர் ஆசிஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் முதியோர் பென்சன் திட்டத்தில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து தாசில்தார் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஆசிஷ்குமார் உத்தரவிட்டார்.
செல்வகுமார், முதியோர் பென்சனுக்கு பணம் வாங்கி தவறான நபர்களை பரிந்துரை செய்த காரணத்தினாலேயே சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு டாஸ்மாக்கில் இருந்தார், அதன்பின்பு ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். அதன்பின்பு அங்கிருந்து இப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தபோது தாமிரபரணி மணல் கொள்ளையர்களுக்கும், தாசில்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்
தற்போது செல்வகுமார் மூலம் மேற்கொள்ளப்பட்ட முதியோர் பென்சன் திட்ட கணக்கு வழக்குகள் மீதும் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போல் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கயத்தாறு ஓன்றியத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.