உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் 23,792 பாலியல் பலாத்கார வழக்குகள்: கபில்சிபல் தகவல்
டெல்லி: நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 23,792 பலாத்கார வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்குகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தில் நேற்று நிலுவையில் உள்ள பலாத்கார வழக்குகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
நிலுவையில் 23,792 வழக்குகள்
இதற்கு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் பதில் அளிக்கையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ந் தேதி வரை நாடு முழுவதும் 21 உயர்நீதிமன்றங்களில் பலாத்காரம் தொடர்பான 23,792 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் 8,772 வழக்குகள் தீர்வு காணப்பட்டன.
அலகாபாத்தில் 8215
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 8,215 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு கடந்த 3 ஆண்டுகளில் 39 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
டெல்லியில் 924 பெண்டிங்
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 924 கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளில் 1,135 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் 243 பெண்டிங்
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 243 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளில் 4, 522 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
சிக்கிமில் ஜீரோ
சிக்கிம் உயர்நீதிமன்றத்தில் பலாத்கார வழக்குகளே நிலுவையில் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் 2 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
டெல்லி பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பலாத்கார வழக்குகளை விரைந்து தீர்க்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்குமாறும், அவற்றின் முன்னேற்றத்தை கண்காணிக்குமாறும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளையும், மாநில முதல்வர்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது என்றார் அவர்.