நாடாளுமன்றம் முன்பு திமுக எம்.பிக்கள் நடத்திய 'டெசோ' ஆர்ப்பாட்டம்!
டெல்லி: இலங்கையில் நடைபெறும் காமவெல்த் மாநாட்டை இந்திய புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் டெல்லியில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காமன்வெல்த் விவகாரம், தமிழக மீனவர்கள் படுகொலை உள்ளிட்டவற்றை முன்வைத்து தமிழகம் முழுவதும் டெசோ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி, திருச்சியில் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூரில் குஷ்பு உள்ளிட்டோர் டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தனர்.
டெல்லியில் திமுக டி.ஆர். பாலு தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக திமுக எம்.பிக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆங்கிலத்தில் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளுடன் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கனிமொழி, தயாநிதி, டி.கே.எஸ். இளங்கோவன், கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.