இஷ்ரத் வழக்கு.. பாண்டேவை கைதுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
குஜராத்தின் அகமதாபாத்தில் 2004ஆம் ஆண்டு மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் அண்மையில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிபி பாண்டே உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு சுட்டுக் கொன்றனர். அது போலி என்கவுன்ட்டர் என்று குறிப்பிட்டது. இந்த வழக்கில் பிபி பாண்டே தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் தமக்கு எதிரான புகாரை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் உச்சநீதிமன்றமோ விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்துக்கும் ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே வந்து ஆஜரானார். மேலும் தமக்கு முன் ஜாமீன் கோரியும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் இம்மனுக்களை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் குஜராத் உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாண்டேவை கைது செய்ய நேற்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சனா தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. பாண்டேவின் முன்ஜாமீன் மனுவை ஆகஸ்ட் 12-ந் தேதியன்று விசாரிப்பதாக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அவரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது.
இதனால் பிபி பாண்டே எந்நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.