ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவோம்- ஸ்டாலின்
சென்னை: தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட டெசோ மாநாட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த போராட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். திருச்சியில் நடந்த போராட்டத்திற்கு பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சியில் நடந்த போராட்டத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
இலங்கையில் மாகாண கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பான ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நீர்த்து போகும் வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சே செயல்பட்டு வருகிறார். அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம், ராஜபக்சே எந்தவிதமான உறுதி அளித்தார் என்று தெரியாது. ஆனால் 1987ல் கையெழுத்தான ஒப்பந்தத்தில் இந்தியாவின் அனுமதி இல்லாமல் ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் செய்ய கூடாது. அதற்கு அந்த நாட்டுக்கு அனுமதியும் கிடையாது.
கடந்த 1985ல் டெசோ அமைப்பு தொடங்கப்பட்ட பின், 1986ல் கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் மாநாடு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு வாழ்வுரிமை மாநாடு நடந்தது. இதில் உலகத் தலைவர்கள், வடமாநில தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நானும், நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் ஐ.நா.வுக்கு சென்று தீர்மானங்களை அளித்தோம்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, இன்று இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் திமுக மக்களுக்காக பாடுபடும் என்றார் அவர்.