வருங்காலம் இந்திய அரசை சபிக்கும்... கருணாநிதி
சென்னை: இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் இலங்கையில் தமிழர்கள் புத்துயிர் பெற்றும் கிளம்பும் காலம் உருவாகும். அதற்கு அச்சாரம் போடும் நாள்தான் இது. இது வெறும் சொல் அல்ல. ஆர்ப்பாட்டம் என்பது போர்பாட்டின் முன் அறிவிப்பு. இனியும் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் அது திராவிடங்களை ஏளனபடுத்தும் செயலாக இருக்கும் என்பதை மத்திய அரசு தெரிந்து கொள்ள வேண்டும். அதை ஏற்காவிட்டால் இந்திய அரசை எதிர் காலம் சபிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று டெசோ அமைப்பின் சார்பில் நடந்த தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார் கருணாநிதி. அப்போது அவர் பேசுகையில்,
தமிழர்கள் எழுச்சிக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் மத்திய அரசில் இருக்கிறார்கள். 1956-ம் ஆண்டில் இருந்து தி.மு.க. சார்பில் இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்காக, அவர்கள் விடுதலைக்காக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பிறகு அண்ணாவின் ஆலோசனைப்படி பல போராட்டங்களில் நான் ஈடுபட்டேன். அண்ணாவின் மறைவுக்குப் பின் இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் நடந்த கிளர்ச்சிகள் எதுவானாலும் அதில் திமுகவும் ஈடுபட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் உங்களை சந்திக்கிறேன். ஆனால் நமது போராட்டங்களைப் பற்றி யார் யாரோ எதை எதையெல்லாமோ பேசுவதாக குறிப்பிட்டார்கள். அதைப் பற்றி கவலை இல்லை. உண்மையான தமிழர்கள், தமிழ் ரத்தங்கள், தமிழ் உணர்வுடையவர்கள், தமிழர்கள் தன்மானத்துடன் வாழ வேண்டும் என்று துடிப்பவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதே நம்பிக்கையில் தான் இலங்கையில் பெரும் போராட்டம் முடிந்த பிறகு தம்பி பிரபாகரனை இழந்து, குடும்பங்கள், உற்றார் உறவினர்களை இழந்து தவிக்கிறார்கள். இதற்கு பிறகாவது அனைத்து நாடுகள் அளவிலும் நம்மீது அனுதாபம் கொண்டு, நம்மை வாரி அணைத்து கொண்டும் கை தூக்கிவிட வரமாட்டார்களா என்று அங்கு வாழும் தமிழர்கள் ஏங்குகிறார்கள்.
இன்று தமிழ் நாட்டு வீதிகள் தோறும் நடக்கின்ற பெரும் திரள்போராட்டம் விளம்பரத்துக்காக அல்ல. ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொள்கையும் அல்ல. ஒட்டு மொத்த தமிழர்களின் குரலை எதிரொலிக்கும் நிகழ்ச்சி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 'டெசோ' கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்களுக்கும் செயல் வடிவம் கொடுத்த தமிழக மக்கள் மத்தியில் நினைவூட்ட நடக்கும் நிகழ்ச்சி இது. அந்த 4 தீர்மானங்களையும் செயல்படுத்துவதற்கான அறைகூவல்தான் இந்த எழுச்சிமிக்க பெரும் திரள் போராட்டம் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
இதற்கு பிறகும் இந்திய அரசு மவுனமாக இருந்தால் நாம் யாரிடத்தில் சென்று உதவி செய்யுங்கள், துணை புரியுங்கள் என்று கேட்க முடியும்? என்ற உருக்கத்தோடு மன வேதனையோடு இதை தெரிவிக்கிறேன்.
தமிழர்களுக்கு தேவை அவர்கள் வாழ்ந்த பொன் நாடு அங்கு உரிமையுடன் வாழ அனுமதி தாருங்கள். இலங்கை தமிழர்களுக்காக போராடும் எல்லா இயக்கங்களின் சிந்தனையும் இதுதான். அதை தடுக்கும் தடைகள் எதுவாக இருந்தாலும் அதை தகர்த்து எறிந்து முன்னேறும்.
இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் இலங்கையில் தமிழர்கள் புத்துயிர் பெற்றும் கிளம்பும் காலம் உருவாகும். அதற்கு அச்சாரம் போடும் நாள்தான் இது. இது வெறும் சொல் அல்ல. ஆர்ப்பாட்டம் என்பது போர்பாட்டின் முன் அறிவிப்பு. இனியும் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் அது திராவிடங்களை ஏளனபடுத்தும் செயலாக இருக்கும் என்பதை மத்திய அரசு தெரிந்து கொள்ள வேண்டும். அதை ஏற்காவிட்டால் இந்திய அரசை எதிர் காலம் சபிக்கும்.
இலங்கை தமிழர்களை, தமிழக மீனவர்களை, கலை, கலாசாரம் பண்பாண்டை காப்பாற்ற முன் வர வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இந்த போராட்டத்தை அறிவித்ததாலோ என்னவோ இந்திய அரசும் இலங்கை அரசும் கலந்து பேசி தமிழக மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. அது உண்மையாக இருந்தால் அது இந்த போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார் அவர்.