ரம்ஜான் - சிறப்பு பஸ்கள் இயக்க தமுமுக கோரிக்கை
சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரம்ஜான் பண்டிகை வரும் 9 அல்லது 10ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ரம்ஜான் பெருநாளையொட்டி சென்னையில் வசிக்கும் முஸ்லிம்கள், ஆகஸ்ட் 7 மற்றும் 8ம் தேதிகளில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
ஆண்டுதோறும் விழாகாலமான பெருநாளை முன்னிட்டு வெளியூர் செல்பவர்கள் பேருந்து கிடைக்காமல் சிரமப்படுவதை கண்டு வருகிறோம். சிலர் பெருநாளை கொண்டாட முடியாத நிலையும் ஏற்பட்டுவருகிறது.
அதுபோல் இந்த ஆண்டும் நிகழாமல் இருக்க, சென்னையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் 7மற்றும் 8ம் தேதிகளில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம். மேலும், பெருநாள் தினத்தன்று முழுமையாக தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.